Archives: மே 2023

துக்கமும் மகிழ்ச்சியும்

ஏஞ்சலாவின் குடும்பம் நான்கு வாரங்களில் மூன்று பேரை இழந்ததால் சோகத்தில் தள்ளாடியது. அவரது மருமகனின் திடீர் மரணத்திற்குப் பிறகு, ஏஞ்சலாவும் அவரது இரண்டு சகோதரிகளும் மூன்று நாளாக உணவு மேசையை சுற்றி அமர்ந்துகொண்டு துக்கம் அனுசரித்தனர். மேசனின் இழப்பைக் குறித்து அவர்கள் அழுது கொண்டிருந்தபோது, அவர்களது இளைய சகோதரிக்குள் வளர்ந்து வரும் புதிய கருவின் அசைவுகளைக் காண்பிக்கும் அல்ட்ராசவுண்ட் புகைப்படங்களைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர். 

அவ்வப்போது ஏஞ்சலா பழைய ஏற்பாட்டின் எஸ்றா புத்தகத்தைப் பார்த்து தேறுதல் அடைந்துகொள்வாள். பாபிலோனியர் எருசலேம் ஆலயத்தை தரைமட்டமாக்கி, அவர்களை சிறைபிடித்த பின்னர், தேவ ஜனம் எருசலேமுக்கு திரும்புவதைக் குறித்த தகவலை அது பதிவுசெய்துள்ளது (எஸ்றா 1). ஆலயம் மறுபடியும் எடுப்பித்து கட்டப்படுவதை எஸ்றா பார்த்த பிறகு, தேவனுக்கு துதி ஏறெடுக்கும் சத்தத்தை அவர் கேட்கிறார் (3:10-11). ஆனால் சிறையிருப்பிற்கு முன்னர் மக்களின் துக்கமான அழுகுரல்களையும் அவர் கேட்டிருக்கிறார் (வச. 12). 

ஏஞ்சலாவுக்கு ஒரு வசனம் மிகவும் பிடித்திருந்தது: “ஜனங்கள் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரிக்கிறதினால் அவர்கள் சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறியக்கூடாதிருந்தது” (வச. 13). அவள் ஆழ்ந்த துக்கத்தில் இருந்தாலும், அங்கிருந்தும் மகிழ்ச்சியை அனுபவிக்கக்கூடும் என்பதை அறிந்துகொண்டாள். 

நாமும் நமக்கு நெருங்கியவர்களுடைய இழப்பைக் குறித்து துக்கங்கொண்டாடலாம். அப்படியென்றால், அவர் நம்மை அவருடைய புயங்களுக்கு நடுவில் அணைத்து சேர்த்துக்கொள்வார் என்று நம்பி நம்முடைய துக்கங்களை மகிழ்ச்சியோடு கூடிய தருணங்களோடு அவரிடத்தில் வெளிப்படுத்தக்கடவோம். 

சீர்படுத்தும் தேவன்

நவம்பர் 4, 1966 இல், இத்தாலியின் புளோரன்ஸ் நகரை ஒரு பேரழிவுகரமான வெள்ளம் அடித்துச் சென்றது. ஜார்ஜியோ வசாரியின் புகழ்பெற்ற கலைப் படைப்பான “தி லாஸ்ட் சப்பரை” சேறு, தண்ணீர் மற்றும் கொதி எண்ணெய் ஆகியவைகளால் பன்னிரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மூழ்கடிக்கப்பட்டது. அதன் வண்ணப்பூச்சு கரைந்து, அதன் மரச்சட்டம் கணிசமாக சேதமடைந்ததால், அதை பழுதுபார்ப்பது சாத்தியமில்லை என்று பலர் நம்பினர். இருப்பினும், ஐம்பது வருட கடினமான முயற்சிக்குப் பிறகு, வல்லுநர்களும் தன்னார்வலர்களும் தடைகளை மீறி, மதிப்புமிக்க ஓவியத்தை மீட்டெடுத்தனர். 

பாபிலோனியர்கள் இஸ்ரவேலர்களை சிறைபிடித்தபோது, மரணத்தினாலும் அழிவினாலும் அச்சுறுத்தப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழந்து சீரமைப்பிற்காய் எதிர்பார்த்து காத்திருந்தனர் (புலம்பல் 1). இந்த சூழ்நிலையில் தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியை எலும்புகள் பள்ளத்தாக்கிற்கு கொண்டுபோய், “இந்த எலும்புகள் உயிரடையுமா?” என்று கேட்கிறார். அதற்கு எசேக்கியேல் “கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர்” (எசேக்கியேல் 37:3) என்று பதிலளிக்கிறான். அந்த எலும்புகள் உயிரடையும்படிக்கு தீர்க்கதரிசனம் அறிவிக்கும்படிக்கு தேவன் சொல்லுகிறார். எசேக்கியேல் “தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது” (வச. 7). இந்த தரிசனத்தின் மூலம் இஸ்ரவேலின் மறுசீரமைப்பு எசேக்கியேல் தீர்க்கதரிசியினாலேயே நிகழும் என்பதை தேவன் தெரியப்படுத்துகிறார். 

வாழ்க்கையில் காரியங்கள் உடைக்கப்பட்டு, இனி ஒட்டவைக்கப்படுவது சாத்தியமேயில்லை என்றபோதில், உடைந்த காரியங்களை தேவன் ஒட்டவைப்பதாக உறுதிகொடுக்கிறார். அவர் நமக்கு புதிய சுவாசத்தையும் ஜீவியத்தையும் கொடுக்கிறார்.

தாங்கிப்பிடித்திருக்கும் நம்பிக்கை

“அப்பா எனக்கு பூக்களை பரிசாக அனுப்பியதால் அவர் வீட்டிற்கு வருப்போகிறார் என்பது எனக்குத் தெரியும்.” யுத்தத்தில் என்னுடைய அப்பா காணாமல்போனது தெரியாமல் என்னுடைய ஏழு வயது சகோதரி சொன்ன வார்த்தைகள் இவைகள். அப்பா போருக்கு செல்லுவதற்கு முன்னர், என் சகோதரியின் பிறந்தநாளை முன்னிட்டு அவளுக்கு பூக்களை பரிசாக முன்கூட்டியே ஆர்டர் செய்திருந்தார். அவர் தொலைந்த பின்பு அவைகள் வந்துசேர்ந்தன. அவள் சொன்னது சரியாகிப்போய்விட்டது. என்னுடைய அப்பா யுத்தத்தில் ஒரு பெரிய ஆபத்தை சந்தித்து, வீடு திரும்பினார். பல ஆண்டுகள் கடந்த பின்னரும் என் சகோதரி அந்த பூக்களை ஞாபகமாய் வைத்திருந்தாள். அதைப் பார்க்கும்போதெல்லாம் நம்பிக்கையோடு காத்திருத்தலின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வாள். 

உடைந்துபோன இந்த பாவ உலகத்தில் நம்பிக்கையை காத்துக்கொள்வது சாதாரணமானது அல்ல. அப்பாக்கள் எப்போதும் வீடுவந்து சேர்வதில்லை. பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் சிலவேளைகளில் நிராசையாகிப் போய்விடுகின்றன. ஆகிலும் கடினமான தருணங்களில் தேவன் நமக்கு நம்பிக்கையை அருளுகிறார். வேறொரு யுத்த காலத்தில், ஆபகூக் தீர்க்கதரிசி, பாபிலோனியர்களால் ஏற்படப்போகிற யுத்தத்தை முன்னறிவித்தார் (ஆபகூக் 1:6; 2 இராஜாக்கள் 24). ஆனாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று உறுதிகூறுகிறார் (ஆபகூக் 1:12-13). தேவன் கடந்த காலத்தில் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்தவராய், “அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” (3:17-18) என்று அறிக்கையிடுகிறார். 

சில விளக்கவுரையாளர்கள், ஆபகூக் என்னும் பெயருக்கு “பற்றியிருத்தல்” என்று பொருள் கூறுகிறார்கள். அவர் நம்மை விடாமல் பற்றிப் பிடித்திருப்பதால், சோதனைகளின் மத்தியிலும் அவரை நம் ஒரே நம்பிக்கையாய் பற்றிப் பிடித்திருப்போம்.

ஆவியாலே ஆகும்

ஜெர்கன் மோல்ட்மேன் என்ற தொண்ணூற்று நான்கு வயதான ஜெர்மானிய இறையியலாளர் எழுதிய பரிசுத்த ஆவி பற்றிய புத்தகத்தின் விவாதத்தின் போது, பேட்டியெடுப்பவர் அவரிடம், “நீங்கள் எப்படி பரிசுத்த ஆவியை செயல்படுத்துகிறீர்கள்? மாத்திரை சாப்பிட்டால் செயல்படுமா? மருந்து நிறுவனங்கள் ஆவியானவரை உற்பத்திசெய்கின்றனவா?” என்று கேலியாகக் கேட்டார். மோல்ட்மேனின் புருவம் உயர்ந்தது. தலையை மெல்லமாக அசைத்து, “நான் என்ன செய்யமுடியும்? எதுவும் செய்யாதீர்கள். ஆவியில் காத்திருங்கள், ஆவியானவர் வருவார்” என்று பதிலளித்தாராம். 

நமது ஆற்றலும் நிபுணத்துவமும்தான் காரியங்களைச் செய்ய வைக்கும் என்ற நம்முடைய தவறான நம்பிக்கையை மோல்ட்மேன் சுட்டிக்காட்டினார். தேவன் காரியங்களைச் செய்கிறார் என்பதை செயல்கள் வெளிப்படுத்துகின்றன. திருச்சபையின் துவக்கநாட்களில், மனித யுக்திகளினாலோ அல்லது திறமையான தலைவர்களோ அது சாத்தியமாகவில்லை. மாறாக, “பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல,” அறையில் அமர்ந்திருந்த அனைவரையும் ஆவியானவர் நிரப்பினார் (2:2). அடுத்து, ஒரு புதிய சமூகத்தில் பலதரப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டுவதின் மூலம் அனைத்து இன மேன்மைகளையும் ஆவியானவர் ஒன்றுமில்லாமல் சிதைத்தார். தேவன் தங்களுக்குள் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைக் கண்டு சீஷர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் எதுவும் செய்யவில்லை, “அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்(டனர்)” (வச. 4). 

திருச்சபையோ அல்லது பகிர்ந்து செய்யப்படும் எந்த ஊழியமோ நம்முடைய திறமையினால் சாத்தியமாகக்கூடியது அல்ல. ஆவியானவரால் என்ன செய்யமுடியுமோ அதை மாத்திரமே நாம் முழுமையாய் சார்ந்துகொள்கிறோம். இது நம்மை துணிகரமாகவும் இளைப்பாறவும் செய்கிறது. பெந்தெகொஸ்தே நாளை அநுசரிக்கிற இன்று, ஆவியானவருக்குக் காத்திருந்து செயல்படுவோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விழித்திருந்து ஜெபியுங்கள்

 

ஆவிக்குரிய போராட்டங்களில் ஈடுபடும்போது, கிறிஸ்தவ விசுவாசிகள் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதை ஞானமற்ற முறையில் செய்தால் எவ்வளவு ஆபத்தானது என்பதை புளோரிடாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கண்டுபிடித்தார். அவர் ஜெபிக்கும்போது கண்களை மூடுவது வழக்கம். அவ்வாறு ஒர்நாள் தன்னுடைய காரை ஓட்டிக்கொண்டு செல்கையில், ஜெபிக்க தன் கண்ணை மூடமுற்பட்டு, ஓர் நிறுத்தத்தில் நிற்கத்தவறி, வேறு பாதை வழியாக குறுக்கிட்டுபோய், ஓர் வீட்டு உரிமையாளரின் முற்றத்தில் தன் காரை நிறுத்தினார். அதிலிருந்து தன்னுடைய காரை பின்பாக எடுக்க முயன்று தோற்றுப்போனார். காயம் ஏற்படவில்லை என்றாலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும் அவருக்கு போலீஸ் அபராதம் விதித்தது. இந்த ஜெப வீராங்கனை எபேசியர் 6:18-ன் முக்கிய பகுதியை தவறவிட்டுவிட்டார்: “விழித்துக்கொண்டிருங்கள்!”

எபேசியர் 6ல் இடம்பெற்றுள்ள சர்வாயுதவர்கத்தின் பகுதிகளாக, அப்போஸ்தலர் பவுல் இரண்டு இறுதி காரியங்களை உள்ளடக்குகிறார். முதலில், நாம் ஆவிக்குரிய யுத்தங்களை ஜெபத்துடன் செய்யவேண்டும். இதன் பொருள் ஆவியில் ஜெபிப்பது—அவருடைய வல்லமையை நம்புவது. மேலும், அவருடைய வழிகாட்டுதலில் இளைப்பாறுதலடைதல், அவரது தூண்டுதல்களுக்கு பதிலளித்தல், எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா வகையான ஜெபங்களையும் ஜெபித்தல் ஆகியவைகளும் உள்ளடங்கும் (வச. 18). இரண்டாவதாக, “விழித்துக்கொண்டிருங்கள்” என்று பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார். இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவதற்கும் (மாற்கு 13:33), சோதனையை ஜெயிப்பதற்கும் (14:38), மற்ற விசுவாசிகளுக்காகப் பரிந்துபேசுவதற்கும் ஆவிக்குரிய விழிப்புணர்வு நமக்கு உதவும் (எபேசியர் 6:18).

நாம் தினமும் ஆவிக்குரிய யுத்தங்களில் ஈடுபடும்போது, தீய சக்திகளை எதிர்த்துப் போரிட்டு, கிறிஸ்துவின் வெளிச்சத்தால் இருளை விரட்டி, விழித்திருந்து ஜெபிக்கும் அணுகுமுறையுடன் நம் வாழ்வில் ஜெயம்பெறுவோம். 

 

தூதர் துணை

மருத்துவ பாிசோதனை மேல் பரிசோதனை செய்து கொண்டேயிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபடியால், பினு மிகவும் சோர்வாகவும் பாரமாகவும் கருதினாள். அவளுடைய உடம்பில் ஏதாவது புற்றுநோய் கட்டிகள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதாக மருத்துவர்கள் அவளிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய பிரசன்னத்தின் வாக்குறுதிகளாலும், அவள் ஜெபிக்கும்போது அல்லது வேதத்தைப் படிக்கும்போது ஓர் நித்திய சமாதானத்தையும் கொண்டு அவளை ஊக்கப்படுத்தினார். அவள் நிச்சயமற்ற மனநிலையுடன் போராடினாள். மேலும் தேவனிடத்தில், ஒருவேளை “இப்படியிருந்தால்...” என்று தன்னுடைய பயத்தை அதிகமாய் பகிர ஆரம்பித்தாள். தீவிர அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு நாள் காலை பினு தன் கண்ணில்பட்ட யாத்திராகமம் 23ல் ஒரு வசனத்தை வாசித்தாள். அது: “வழியில் உன்னைக் காக்கிறதற்கும்... இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” (வச. 20)

அந்த வார்த்தைகளை தேவன் மோசேயின் மூலம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலருக்குக் கூறினார். தம்முடைய ஜனங்கள் பின்பற்றும்படியாக தேவன் நியாயப்பிரமாணங்களைக் கொடுத்து, அவர்களைப் புதிய தேசத்திற்கு அழைத்துச் சென்றார் (வச. 14-19). ஆனால் அவர்களுடைய பாததையில் அவர்களை பாதுகாப்பதற்காக, “ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” என்று கூறுகிறார். பினுவின் வாழ்க்கை நிலைமை இதுவாக இல்லாவிட்டாலும், தேவ தூதர்களைக் கொண்டு கர்த்தர் தம்முடைய ஜனத்தை பாதுகாப்பதை மற்ற வேதப்பகுதிகளின் மூலம் அவள் அறிந்தாள். சங்கீதம் 91:11, “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” என்று சொல்லுகிறது. மேலும் எபிரெயர் 1:14, “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” என்று குறிப்பிடுகிறது.

நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தால், நமக்கும் ஊழியம் செய்ய ஒரு துதன் அனுப்பப்படுகிறார் என்பதை விசுவாசிப்போம். 

 

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும்.

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும்.